பெரம்பலூர்,அக்.16: வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கான குடற்புழு நீக்கம் முகாம் வருகிற 26,27 தேதிகளில் நடக்கிறது என பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் கடந்த 2011 செப்டம்பர் 15ம்தேதியன்று தொடங்கப்பட்ட இலவச வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டங்களில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக, ஒரு பயனாளிக்கு 4 வெள்ளாடுகள், செம்மறிஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டங்களின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் தங்கள் கால்நடைகளை கொள்முதல் செய்தபிறகு நன்கு பராமரிக்க வேண்டும் என அரசால் வலியுறுத்தப்பட்டு உள்ளது.