கரூர், அக்.16: கரூர் அருகே அனுமதியின்றி நடத்திய பாரில் ஏற்பட்ட பயங்கர ரகளையில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் அருகே உள்ள ஆத்தூர் பிரிவு சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வந்தது. நெடுஞ்சாலைகளில் உள்ள பார்கள் அகற்றப்பட்டபோது இங்கிருந்த அரசு மதுக்கடை மற்றும் பார் அகற்றப்பட்டது. எனினும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதியின்றி மதுவிற்பனை செய்யும் பார் நடத்தப்பட்டு வந்தது. இக்கடையை குளித்தலை ஐநூற்றுமங்கலம் பாலமுருகன் என்பவர் நடத்தி வருகிறார். இவரது அண்ணன் சிவா (28) தம்பிக்கு துணையாக கடையில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலர் மதுகுடித்தபோது கடையில் மயங்கி கிடந்த ஒருவரை தண்ணீர் ஊற்றி சிவா அங்கிருந்து கிளம்ப சொன்னதாக தெரிகிறது. இதனை சக குடிமகன்கள் கண்டித்தனர். இதனால் நேற்று காலை கடைக்கு சிலர் வந்து இந்த சம்பவம் குறித்து தட்டிக்கேட்டனர். அப்போது அவர்களுக்கும் கடைநடத்துவோருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.