உடுமலை, அக். 12: கருவியில் பதிவேற்றம் செய்யாததால், உடுமலை ரேஷன் கடைகளில் பொருட்கள் இருந்தும் 11 நாட்களாக அரிசி, பருப்பு போன்ற பொருட்களை விநியோகிக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். உடுமலை தாலுகாவில் 65 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு தினசரி பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் வழங்கப்படுகிறது. ஒரு கடைக்கு 1000 முதல் 1200 வரை ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். உடுமலை பகுதி கிராமப்புறங்கள் நிறைந்துள்ளதால், ஏழை கூலி தொழிலாளர்கள் மாதந்தோறும் தவறாமல் ரேஷன்கடைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். ஆனால் இந்த மாதம் 11 நாட்கள் ஆகியும், நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள ரேஷன் கடை, தென்னமரத்து வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி, அண்ணா குடியிருப்பு உட்பட 20க்கும் மேற்பட்ட ரேஷன்கடைளில் பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை.