காஞ்சிபுரம்: கொத்தனார், தச்சர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு அரசின் ஓஎம்சிஎல் (OMCL) நிறுவனம் மூலமாக துபாயில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு 2 ஆண்டு பணி அனுபவத்துடன் 27 முதல் 45 வரையுள்ள கொத்தனார்கள், ஆபரேட்டர்கள், தச்சர்கள் மற்றும் போர்மேன்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வேலை சம்பந்தப்பட்ட விவரங்கள் தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வளைதளமான www.omcmanpower.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். கொத்தனார், ஆபரேட்டர் மற்றும் தச்சர்களுக்கு மாத ஊதியம் ரூ23 ஆயிரம் மற்றும் மிகை பணி ஊதியமும், போர்மேன்களுக்கு மாத ஊதியம் ரூ38 ஆயிரமும் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் கூடுதல் ஊதியம், இலவச இருப்பிடம் மற்றும் அந்நாட்டின் சட்டதிட்டத்திற்கேற்ப இதர சலுகைகள் வழங்கப்படும்.