திருவண்ணாமலை, அக்.10: திருவண்ணாமலையில் மாட வீதியில் வலம் வந்த கிருஷ்ணா தீர்த்த கலச ரத யாத்திரையை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா வரும் 11ம் தேதி தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி தாமிரபரணியில் நீராட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். நெல்லை மாவட்டம் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் வரை தாமிரபரணியில் உள்ள முக்கிய தீர்த்தங்களில் பொதுமக்கள் நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் தாமிரபரணி மகா புஷ்கரத்தையொட்டி கிருஷ்ணா தீர்த்த கலச ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்றுமுன்தினம் வேலூரில் தொடங்கிய ரத யாத்திரை நேற்று திருவண்ணாமலை வந்தடைந்தது.