பெரும்புதூர், அக்.9: குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹21.86 லட்சத்தில் பசுமை குடில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு மரம், செடிகள் வளர்க்கப்படுகின்றன. மேலும் ₹1.45 லட்சத்தில் பண்ணை குட்டை, ₹2.45 பழத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மலைப்பட்டு ஊராட்சியில் தனிநபர் இல்ல கழிப்பறை திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. பள்ளி கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மட்கும் குப்பை, மட்கா குப்பை பிரித்தெடுக்கும் முறை உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.மேற்கண்ட பணிகளை கென்யா நாட்டை சேர்ந்த 4 கவர்னர்கள், 2 உலக வங்கி நிர்வாகிகள், அந்நாட்டு கலெக்டர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் 20 பேர் கொண்ட குழு, குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் நேற்று பார்வையிட்டனர்.