குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு அதிரடி துண்டிப்பு

காரைக்கால், செப். 26:  காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் நீண்ட காலமாக வீட்டு வரி, குடிநீர் கட்டணம் கட்டாதவர்களின் குடிநீர் இணைப்புகள் நேற்று அதிரடியாக துண்டிக்கப்பட்டது.புதுச்சேரி உள்ளாட்சித்துறை செயலர் மற்றும் இயக்குனரின் அறிவுறுத்தல்படியும், மாவட்ட கலெக்டர் கேசவன் உத்தரவுப்படியும், திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில், நீண்ட காலமாக வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டணம் கட்டாதவர்களிடம், கட்டணத்தை வசூல் செய்யும் பொருட்டு, கட்டணம் செலுத்தாவர்களின் முகவரிக்கு, திருமலைராயன்பட்டினம் கொயூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான் அரோலியஸ், முன் அறிவிப்பு ஒன்று செய்தார். அதில், அறிவிப்பு கண்ட 24 மணி நேரத்தில் கட்டணத்தை செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.

 அதன்படி, நேற்று முன்தினம் திருமலைராயன் பட்டினம் போலீசார் பாதுகாப்புடன், நீண்ட காலமாக வீட்டு வரி, குடிநீர் கட்டணம் கட்டாதவர்களின் குடிநீர் இணைப்புகளை அதிரடியாக துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இப்பணி தொடர்ந்து நடைபெறும் என்பதால், நீண்ட காலமாக வீட்டு, வரி, குடிநீர் வரியை கட்டாதவர்கள் தாமாக முன்வந்து வரியை செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிகையை தவிர்த்துகொள்ள வேண்டுகிறோம் என ஆணையர் ஜான் அரோலியஸ் தெரிவித்துள்ளார். இப்பணியில், கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் மெய்யழகன், வருவாய் ஆய்வாளர் வீரசெல்வம் மற்றும் கொம்யூன் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: