ஈரோடு,செப்.21: பெரும்பள்ளம் ஓடையை இரண்டாவது முறையாக ரூ.15 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நேற்று துவங்கியது. கீழ்பவானி வாய்க்காலின் முக்கிய கசிவு நீர் திட்டமாக சூரம்பட்டி அணைக்கட்டு விளங்குகிறது.அணைக்கட்டில் இருந்து பெரும்பள்ளம் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த காலங்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. 2,450 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வந்த நிலையில், அணைக்கட்டு தூர்வாரப்படாததாலும், கழிவு நீர் தேங்கியதாலும் பல ஆண்டுகளாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாமல் போனது. இதையடுத்து, ஈரோடை என்ற தொண்டு அமைப்பின் மூலம் சூரம்பட்டி அணைக்கட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 33 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டது. இதன் பயனாக இந்தாண்டு வாய்க்கால் பாசனத்திற்கு அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.