புதுச்சேரி, ஆக. 15: புதுவையில்
ஹெல்மெட் கட்டாயம் சட்டத்தை அமல்படுத்த கவர்னர் கிரண்பேடி டிஜிபிக்கு தன்னிச்சையாக உத்தரவிட முடியாது என முதல்வர் நாராயணசாமி பதிலடி கொடுத்துள்ளார். புதுவையில் விபத்துக்களை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஹெல்மெட் கட்டாய சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவும், காவலர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டவும் டிஜிபிக்கு கவர்னர் கிரண்பேடி அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தார். இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தி இருந்தார். இந்தநிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் குபேர் நினைவு தினத்தையொட்டி பாரதி பூங்கா அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் நேற்று மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில், புதுவையில் ஹெல்மெட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசு ஏற்கனவே முடிவெடித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினோம். கட்டாய ஹெல்மெட் குறித்து சட்டசபையில் கேள்வி எழுந்தது. அப்போது எம்எல்ஏக்கள், விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினர்.