மண்ணச்சநல்லூர் அருேக மொபட் மீது கார் மோதி கணவன் கண்முன் பெண் பலி

மண்ணச்சநல்லூர், ஆக.14: சமயபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையை மொபட்டில் கடந்து செல்ல முயன்றபோது விபத்தில் மூதாட்டி பரிதாபமாக பலியானார். இதில் இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின. மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தளுதாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா (55). இவரது மனைவி மகேஸ்வரி (50). நேற்று முத்தையா தனது மனைவி மற்றும் பேரக்குழந்தைகள் கவின் (5), மதுஸ்ரீ(8) ஆகியோருடன் சமயபுரம் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு மொபட்டில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கம் பிரிவு ரோடு பகுதியில் ரோட்டை கடக்க முயன்றபோது பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் மொபட் மீது மோதியது.

இதில் மொபட்டின் பின்னால் அமர்ந்திருந்த மகேஸ்வரி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மொபட்டை ஓட்டிய முத்தையா படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் மொபட்டின் முன்புறம் அமர்ந்திருந்த குழந்தைகள் கவின், மதுஸ்ரீ இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான மகேஸ்வரி உடலை மீட்டு பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: