விருதுநகர், ஆக. 14: விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதி ஊராட்சிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பாதசாரிகள் நடுரோட்டில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாவட்ட தலைநகரான விருதுநகரில் சாலை வசதியோ, உட்கட்டமைப்பு வசதிகளோ இல்லை. நகரில் உள்ள தெருக்கள் ஏற்கனவே குறுகலாக இருக்கும் நிலையில் ஆக்கிரமிப்புகளால் மேலும் அகலம் குறைந்துள்ளது. ரோட்டின் இருபுறமும் உள்ள நடைபாதைகள் பாதசாரிகளுக்கானதா? இல்லை கடைக்காரர்களுக்கானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. விருதுநகரில் மெயின்பஜார், காசுக்கடை பஜார், வடக்கு ரத வீதி, பழைய பஸ்நிலைய சுற்றுப்பகுதி, கச்சேரி ரோடு, புல்லாலக்கோட்டை ரோடு, மதுரை ரோடு, பழைய அருப்புக்கோட்டை ரோடு, சிவகாசி ரோடு, சாத்தூர் ரோடு, ராமமூர்த்தி ரோடு, ரயில்வே பீடர் ரோடு, ராமமூர்த்தி ரோடு, அரசு மருத்துவமனை முன்புறம், தந்திமரத் தெரு, கிருஷ்ணமாச்சாரி ரோடு, புளுகானுரணி ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது.