வால்பாறை: பொதுப்பணித்துறை குடியிருப்பில் 10 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்திருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. வால்பாறை காமராஜ் நகர் பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலர் குடியிருப்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மற்றும், இதர அரசு ஊழியர்களும் வாடகை அடிப்படையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை பூட்டப்பட்டிருந்த வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு இருந்தது. இதில் செயற்பொறியாளர், கோட்ட பொறியாளர் மற்றும் பலரது வீடுகள் அடங்கும். 10 வீடுகளில் திருட முயற்சி செய்ததில், 8 வீடுகளின் கதவுகள் மட்டுமே திருடனால் திறக்க முடிந்தது. அனைத்து வீடுகளிலும் பொருட்கள் கலைந்து கிடந்தன. இந்நிலையில் பலர் மழை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்று வீடு திரும்பவில்லை. எனவே திருட்டுப்போன பொருட்கள் விபரம் தெரிவிக்கப்படவில்லை.
பொறியாளர் ஒருவரின் லேப்டாப் திருடப்பட்டது மட்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் அங்குள்ள கேன்டீனின் கேஸ் சிலிண்டரும் திருடப்பட்டு உள்ளது. திருட்டு சம்பவம் குறித்து உதவி பொறியாளர் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். கடந்த சில வாரத்திற்கு முன் கோ-ஆப் காலணியில் மற்றும் வால்பாறை டவுனில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதிஅடைந்துள்ளனர்.