சேலம், ஆக.14:மேட்டூர் அணைக்கு அருகே வசித்தாலும், குடிநீருக்கு தவிப்பதாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், ஜலகண்டாபுரம் அடுத்த செலவடை அழகாபுரம் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘அழகாபுரம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் வீட்டிற்கு உபயோகப்படுத்தவும், குடிநீருக்கும் தண்ணீர் வசதி இல்லை. இதனால், பணம் கொடுத்து, தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். குடியிருப்பில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் தான் மேட்டூர் அணை உள்ளது. அங்கு கரைபுரண்டு வெள்ளம் ஓடினாலும், எங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை.