புதுச்சேரி, ஆக. 14: திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ராஜா தியேட்டர் சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தினர் 55 பேரை பெரியகடை போலீசார் கைது செய்தனர். கடந்த 2017ம் ஆண்டு ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தேச துரோக வழக்கத்தில் தமிழக அரசு கைது செய்ததை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்யக்கோரியும் புதுச்சேரி ராஜா தியேட்டர் சந்திப்பில் திரண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.