புதுச்சேரி, ஆக. 13: யூனியன் பிரதேசமான புதுச்சேரி தற்போது போதிய நிதியின்றி வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் இருக்கும் நிதி ஆதாரங்களை சீர்குலைக்கும் வகையில் பல துறைகளில் தேவைக்கு அதிகமான ஆட்கள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையில்லாமல் லட்சக்கணக்கான பணம் செலவிடப்பட்டு வருகிறது. இந்த வகையில் திப்ராயப்பேட்டை செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி தொழுநோய் மருத்துவமனையும் தற்போது தேவைக்கு அதிகமான நிதியை ஆண்டுதோறும் விழுங்கிக்கொண்டிருக்கிறது.தொழுநோய் என்பது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியதுதான். அதற்காக எவ்வளவு செலவானாலும் அரசு செய்ய வேண்டும்தான். ஆனால் தற்போது தொழுநோய் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் தொழுநோயாளிகள் இருந்து வருகிறார். புதுச்சேரி அரசு சார்பில் நடத்தப்படும் இந்த மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் உள்ளன. ஆனால் தற்போது 9 பேர் மட்டுமே உள்ளிருப்பு நோயாளிகளாக உள்ளனர். இந்நிலையில் இங்கு மருத்துவர், செவிலியர், பிற பணியாளர் என 24 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 1 மருத்துவர், 2 தலைமை நர்ஸ், 8 ஸ்டாப் நர்ஸ் உள்ளிட்டோர் அடங்குவர். இவர்களுக்கு மாதம்தோறும் ரூ.12 லட்சத்து, 98 ஆயிரத்து 540 சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ. ஒன்றரை கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் தேவையில்லாமல் ஆண்டுக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக வீணடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.