செய்யாறு, ஆக.9: செய்யாறில் நகராட்சி தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளியில் கடந்த 8 ஆண்டுகளாக ஊதியமின்றி துப்பரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.செய்யாறு நகராட்சியின்கீழ் செயல்படும் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாதம் ₹175 ஊதியத்தில் 10 பெண் துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி ஆணையாளரால் பணி நியமனம் செய்யப்பட்டு பணியாற்றிடும் துப்புரவு தொழிலாளர்களுக்கு நகராட்சியின் சார்பில் மாத ஊதியம் வழங்கப்பட்டன. பின்னர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மூலமாக ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு ஊதியம் வழங்கி வந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த 8 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.