கராத்தே மாஸ்டர் வீட்டில் 7 பவுன் நகை, பணம் கொள்ளை

வில்லியனூர், ஆக. 9:   வில்லியனூர் அருகே திறந்த வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 புதுவை மாநிலம் வில்லியனூர் கூடப்பாக்கம் ரோடு, மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் அஞ்சலிதேவி. இவரது கணவர் கனகராஜ் இறந்துவிட்ட நிலையில், மகள் பூரணியுடன் (25) வசித்து வந்தார். பூரணி கரேத்தே மாஸ்டர் ஆவார். அஞ்சலிதேவி தினமும் கூலி வேலைக்கு சென்று வருவது வழக்கம்.சம்பவத்தன்று தாய், மகள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது பூரணி கடைக்கு செல்ல தனது பைக்கை எடுத்தபோது பஞ்சராகி இருந்தது. தனது தாய் வீட்டில் இருந்ததால் கதவை பூட்டாமல் அருகிலுள்ள கடைக்கு பஞ்சர் ஒட்ட பூரணி வண்டியை எடுத்துச் சென்றுள்ளார்.

ஆனால் மகள் வீட்டில் பாத்ரூமில் இருப்பதாக கருதிய, அஞ்சலிதேவி வழக்கம்போல் கூலி வேலைக்கு வெளியே சென்றுவிட்டார். தாய், மகள் இருவரும் வீட்டில் இல்லாத நிலையில் கதவு திறந்து கிடந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட யாரோ மர்ம ஆசாமிகள் திறந்து கிடந்த வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து 7 பவுன் நகைகள், ரூ.23 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.இதனிடையே பைக்கிற்கு பஞ்சர் ஒட்டிவிட்டு வீடு திரும்பிய பூரணி பீரோ உடைக்கப் பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தனது தாய்க்கு தகவல் தெரிவித்த அவர், பின்னர் வில்லியனூர் காவல் நிலையத்தில் முறையிட்டார். வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் தலைமையிலான போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். திறந்த வீட்டில் நுழைந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: