புதுச்சேரி, ஆக. 9: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு புதுச்சேரி அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.அன்பழகன் (அதிமுக): தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, தனது நெடிய உழைப்பாலும், கொண்ட கொள்கையில் உறுதியோடும், தலைமை பண்பாலும் தமிழக அரசியல் அரங்கில் ஒப்பற்ற முப்பெரும் தலைவராக விளங்கியவர் கருணாநிதி. சிறந்த அரசியல்வாதி, சுயமரியாதை உணர்வுகளை கட்டிக் காத்தவர். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். அனைத்து துறைகளிலும் தனி முத்திரை பதித்தவர். அவரது மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும். அரசியலில் இரு துருவங்களாக இருந்தபோதும் தலைவர் எம்ஜிஆரின் நட்புக்கு பாராட்டு பெற்றவர். அரசியல் ரீதியில் பல்வேறு மாறுபட்ட விமர்சனங்களை செய்திருந்தாலும், கருணாநிதியின் திறமைகள், பெருமைகளை அவரின் சிறப்புகளை இத்தருணத்தில் யாராலும் நினைவு கூறாமல் இருக்க முடியாது. திராவிடத்தின் முதுபெரும் தலைவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவருடைய தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.