எல்.முருகன் ஆயிரம் சொன்னாலும் தொகுதி யாருக்கு என அதிமுகவே முடிவெடுக்கும்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

சென்னை: ஒன்றிய அமைச்சராக உள்ள முருகன், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் சீட் ஷேரிங் பற்றி ஆயிரம் கூறலாம். ஆனால், இறுதி முடிவை அதிமுக தான் எடுக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தென்சென்னை மக்களவை தொகுதி பாஜவிற்கு முக்கியமானது என ஒன்றிய இணைய அமைச்சர் எல்.முருகன் கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:   கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சியும், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை கேட்பது காலம்காலமாக கடைபிடிக்கும் மரபு. அந்தவகையில் அந்த எண்ணங்கள் பாஜவிற்கு வந்து இருக்கலாம். ஆனால், அதிமுகவில் பாஜ அங்கம் வகிக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா  தான் தொகுதிகளை உறுதி செய்வார்கள்.

அதன்படி, கூட்டணி கட்சி என்ற முறையில் பாஜ தொகுதிகளை கேட்கலாம். ஆனால், அதனை கொடுப்பதா, வேண்டாமா என்பதை அதிமுக தான் தீர்மானிக்கும். 2024 நாடாளுமன்ற தேர்தலை அறிவித்த பின்னர், கூட்டணிகளுடைய பேச்சுவார்த்தையில் கூட்டணி கட்சிகள் எந்த தொகுதி வேண்டும் என்பன குறித்து கோரிக்கைகளை வைப்பார்கள். அதனை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பதை அதிமுக தான் முடிவெடுக்கும். எல்.முருகனின் கருத்துகள் அவருடைய கட்சிக்காரர்களை வேகப்படுத்த கூறப்பட்டவை. அதனை வைத்து தென்சென்னை பாஜவிற்கு தான் என கூற முடியாது. தொகுதி ஒதுக்கீடு செய்வது என்பது அதிமுக தான். மேலும், தொகுதி பங்கீட்டு குழுவே தொகுதிகளை ஒதுக்கீடு பற்றி இறுதி முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: