சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி பேசுகையில், ‘‘திமுக ஆட்சியில் 1998ம் ஆண்டு பல்லாவரம் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, மறைந்த முதல்வர் தலைவர் கலைஞர் ரூ.36.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதன் பிறகு, 2004-2005ம் ஆண்டில் அந்தப் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது பதிக்கப்பட்ட, அதாவது, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட அந்தக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி, ஒவ்வொரு மழைக் காலத்திலும் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது அதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, தலைமைச் செயலாளருக்கும், அரசிற்கும் அனுப்பப்பட்டுள்ளது. அம்ரூத் திட்டத்தின்கீழ் அதை செயல்படுத்த 90 கோடி ரூபாய் தேவை என்று மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன. அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் எதிர்காலத்தில் பிரச்னை வராது.