8 மாவட்டங்கள் புதிதாக உருவாக்க நடவடிக்கை: வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஆரணி சேவூர் ராமச்சந்திரன்(அதிமுக) பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள், 18 ஒன்றியங்கள், 12 வட்டங்கள் ஆகியவை நிர்வாக ரீதியாக செயல்பட்டு வருகின்றன. பெரிய பரப்பளவில் கொண்ட மாவட்டமாக உள்ள திருவண்ணாமலையை பிரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே செம்பாக்கம், வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளூர் ஆகிய பகுதிகளை பிரித்து ஆரணியை தலைமை இடமாகக் கொண்டு ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளித்து வருவாய் துறை அமைச்சர் கே. கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில் “வருவாய்த்துறை அரசாணை எண் 279ன் படி ஒரு மாவட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட ரீதியான தகுதிகளை பூர்த்தி செய்யாததால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க முடியாது. 8 மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டியிருந்தால் நிதி நிலைமைக்கு ஏற்ப முதல்வருடன் முயற்சியுடன் பேசி முடிவு செய்யப்படும்” என்றார்.

மீண்டும் பேசிய சேவூர் ராமச்சந்திரன் பேசுகையில் “8500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர் மாவட்டத்தின் ஒரு எல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்வதற்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டி உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் மாவட்ட அலுவலகங்களுக்கு செல்வதற்கு 2-3 மணி நேரம் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே புதிய மாவட்ட பிரிக்க வேண்டும்” என்றார்.

இதற்ங பதில் அளித்து அமைச்சர் பேசுகையில் “மாவட்டத்தில் ஒரு எல்லை முதல் மற்ற எல்லை வரை செல்வதற்கு நீண்ட தொலைவு ஆகிறது.  முதலமைச்சர் உடைய கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தற்போதைய நிதி சூழல் படி நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் சட்டப்படி மாவட்டத்தை பிரிப்பதற்கான தகுதியை பூர்த்தி செய்யவில்லை” என்றார்.

Related Stories: