மகாராஷ்டிராவில் இருந்து வருகை குமரியில் பச்சை திராட்சை விற்பனை அதிகரிப்பு

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பழவகைகள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக இளநீர், தர்பூசணி விற்பனை அதிக அளவு நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்கு இளநீர் நெல்லை, தென்காசி மாவட்டம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகிறது. பச்சை இளநீர் ரூ.30க்கும், சிவப்பு இளநீர் ரூ.35 முதல் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 தர்பூசணி பழம் குமரி மாவட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அதிக அளவு வருகிறது. இந்த பழங்களை தவிர கரும்பு ஜூஸ் உள்பட பல ஜூஸ்கள் விற்பனையும் களை கட்டியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பச்சை திராட்சை அதிக அளவு விற்பனைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்த பச்சை திராட்சை ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பச்சை திராட்சை விலை குறைவாக உள்ளதால் அதிக அளவு மக்கள் வாங்கிச் செல்கின்றனர். பச்சை திராட்சை குமரி மாவட்டத்திற்கு கடந்த இரு மாதங்களாக வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் பச்சை திராட்சை சீசன் முடிந்து விடும். அதன்பிறகு மாம்பழம் சீசன் தொடங்கி விடும் என பழ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: