சென்னை: விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்குவதாகவும் அதன் பிறகு கூழாங்கற்களை வாயில் போட்டு மெல்லச் செய்வதாகவும், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்த, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி பாஸ்கரன், பல்வீர்சிங் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி ஆறு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜிக்கு உத்தரவிட்டார்.