பெரம்பூர்: அயனாவரத்தில், பெண் காவலர்களுக்கான அதிநவீன வசதியுடன் கூடிய ஓய்வு அறையை ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தொடங்கி வைத்தார். அயனாவரம் ஆர்பிஎப் மைதானம் அருகே பெண் காவலர்களுக்கான அதிநவீன ஓய்வு அறையை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஈஸ்வரராவ், டிஐஜி செந்தில்குமரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், ஐஜி ஈஸ்வரராவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ரயில்வே பாதுகாப்பு படையில் பல்வேறு பணிகளுக்காக பெண் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு சென்னை கோட்டத்தில் மட்டும் 200 பெண் காவலர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கான ஓய்வு அறை கட்டப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், அயனாவரத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் 4 மாடிகள் கொண்ட ஓய்வு அறை கட்டப்பட்டுள்ளது.