புழல்: புழல் காந்தி பிரதான சாலையில் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் தேவை என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சமூக அமைப்புகளுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், புழல் நட்பு வட்டாரத்தின் சார்பில் இரும்பு பீரோ வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நட்பு வட்டார தலைவர் குணாநிதி தலைமை தாங்கினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். புழல் காவல் ஆய்வாளர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இரும்பு பீரோவை பள்ளி தலைமையாசிரியர் ஜான்சிராணியிடம் வழங்கினார்.