சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கட்டிடங்கள் மேம்படுத்தப்படும் என நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் கே.என்.நேரு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு என்று தனியாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு:

 பெருநகர சென்னை மாநகராட்சியில் 281 பள்ளிகளில் 39 பள்ளிகளை மேம்படுத்துவதற்கு கடந்த 2 ஆண்டுகளில் சிங்கார சென்னை 2.0. திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள 139 பள்ளிகள் புதிதாக பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டும் ரூ.50 கோடி மதிப்பீட்டில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பள்ளிக் கட்டிடங்கள் மேம்படுத்தப்படும்.

 சென்னை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பழைய குப்பை கழிவுகளை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் முறையில் நிலத்தை மீட்டெடுக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு மீட்டெடுக்கப்படும் நிலத்தின் ஒரு பகுதியில் தொல்காப்பிய பூங்காவை போன்று புதிதாக ஒரு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கொளத்தூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, வேளச்சேரி மற்றும் ஆலந்தூர் ஆகிய 7 இடங்களில் தலா ரூ.5 கோடியில் மொத்தம் ரூ.35 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும்.

நடப்பாண்டு முதல் 50 பூங்காக்கள் மற்றும் 10 விளையாட்டு திடல்கள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

 நடப்பாண்டு முதல் ரூ.20 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உள்ள நீர்நிலைகள் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 புலியூர் கால்வாய் எனப்படும் டிரஸ்ட்புரம் கால்வாய் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் மூலம் ரூ.14.18 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

 குப்பையை வீடு வீடாக சென்று நேரில் சேகரிக்கவும், குப்பை சேகரிக்கும் பணியை துரிதப்படுத்தவும் புதிதாக 350 பேட்டரி வாகனங்கள் ரூ.6.90 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

 நடப்பாண்டு முதல் பொது-தனியார் பங்களிப்புடன் தினமும் 500 எம்.டி. திறன் கொண்ட புதிய செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன் ஆலை வடசென்னையில் நிறுவப்படும்.

 பெருநகர சென்னை மாநகராட்சியில் 211 மயானங்கள் உள்ளன. இதில் 38 தகன மேடைகள் நவீன எரிவாயு தகனமேடைகளாக மாற்றும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இந்த நிதி ஆண்டில் மேலும் 15 இடங்களில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய எரிவாயு தகனமேடைகள் அமைக்கப்படும்.

அடையாறு உப்பங்கழியில் 58 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வரும் தொல்காப்பிய பூங்காவில் பார்வையாளர்கள் மையம், நடைபாதை பார்வையாளர் தளம் உள்ளிட்ட மறுசீரமைப்பு பணிகள் ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்படும்.

* குடிநீர், கழிவுநீரகற்று சேவை விரிவாக்கம் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்துக்கான புதிய அறிவிப்புகள்:

* சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் சேவைகள், சென்னை பெருநகர பகுதிகளில் அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்துவதற்கு ஆய்வு செய்யப்படும்.

* ராஜீவ் காந்தி சாலை, தரமணி இணைப்பு சாலை மற்றும் 200 அடி சாலை ஆகிய இடங்களுக்கு ரூ.57 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* கூவம் ஆற்றின் 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும்.

* கண்ணகி நகர் மற்றும் கன்னிகாபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு புதிய குழாய்களை பதித்து, குழாய் அமைப்புகளுடன் கூடிய குடிநீர் தொட்டிகள் அமைத்து குழாய் மூலம் ஒவ்வொரு குடியிருப்புக்கும் குடிநீர் வினியோகிக்கும் பணிகள் ரூ.89 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* புழல் மற்றும் சூரப்பட்டில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 300 மில்லியன் லிட்டர் மற்றும் 14 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறனுடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

* சென்னை கொருக்குப்பேட்டையில் 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி 3 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் விடுபட்ட 25 தெருக்களுக்கு புதிய குழாய்கள் அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.18 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* கொளத்தூர் பகுதியில் 20 கி.மீ. நீளத்துக்கு கழிவுநீர் குழாய்களை மேம்படுத்தும் பணி ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

Related Stories: