புதுடெல்லி: ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகள் பங்குகள் மற்றும் இதர முதலீடுகளில் பரிவர்த்தனை செய்த பணம் 6 மாத சம்பளத்தை விட கூடுதலாக இருந்தால் அதுபற்றி தெரிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கு பணியாளர் நலத்துறை கடந்த 20ம் தேதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், அகில இந்திய சர்வீஸ் விதிகளின் படி பங்கு சந்தைகள் மற்றும் இதர முதலீடுகளில் செய்யப்படும் பண பரிவர்த்தனைகள் பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஐஏஎஸ்,ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுக்கு இந்த விதிகள் பொருந்தும். அகில இந்திய சேவை பிரிவு அதிகாரிகள் பங்குகள் மற்றும் இதர முதலீடுகளில் செய்யும் பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை நிர்வாகத்துறை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி குறிப்பிட்ட 3 பிரிவு அதிகாரிகள் பங்குசந்தைகள், இதர முதலீடுகளில் செய்யப்பட்ட பண பரிவர்த்தனைகள் அவர்களுடைய 6 மாத அடிப்படை சம்பளத்தை விட அதிகமாக இருந்தால் அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.