வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது..!!

வேலூர்: வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்னதாக எழுந்த புகாரின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரசித்திபெற்றது வேலூர் கோட்டை ஆகும். இந்த கோட்டைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி வேலூர் கோட்டைக்கு இஸ்லாமிய பெண்கள் சிலர் சுற்றுலா வந்துள்ளனர். அப்பொழுது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் அந்த பெண்களிடம் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும், ஹிஜாபை கழற்ற வற்புறுத்தி உள்ளனர். பிறகு அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த விவகாரம் வேலூர் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து விசாரணையின் பேரில் பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த வீடியோவை எங்கும் வெளியிடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை இந்துத்துவா அமைப்பினர் அனுமதி மறுத்தது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது வேலூர் கோட்டையில் ஒரு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Related Stories: