சென்னை: இலங்கையில் இருந்து இந்தியா திரும்பியது குறித்து இயேசு அழைக்கிறார் நிறுவன தலைவர் பால்தினகரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, இயேசு அழைக்கிறார் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
கோவிட் பெருந்தொற்று காலங்களில் ஆதரவளித்தவர்களுக்கும், ஏழை, எளிய ஜனங்களை பராமரித்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும்படியாகவும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் படியாகவும் பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொழும்பு மற்றும் காலி பட்டணங்கள் நிகழ்ச்சிகளுக்கான அழைப்பை ஏற்று இலங்கை சென்றனர்.
அங்கிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள அருட்பணி ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனை செய்யும்படி அவர்கள் யாழ்ப்பாணம் செல்ல இருந்த போது சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர். சில பிரச்னைகள் ஏற்படலாம், தாங்கள் ஸ்தோத்திர ஜெபக் கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று யாழ்ப்பாணத்திலிருந்து உயர் அதிகாரிகள் கூறினர். ஆகவே இந்தியாவிக்கு திரும்பினார். மேலும் பால் தினகரன் கொழும்பில் இருந்த போது இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவை கொழும்பில் சந்தித்து, தேசத்தின் நலனுக்காக அவர் எடுக்கும் சீரமைப்பு முயற்சிகளை இறைவன் ஆசிர்வதிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். தேசத்தின் இளைஞர்களின் மேம்பாட்டுக்கு உதவுவதற்கான தன் விருப்பத்தையும் பால் தினகரன், ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
இலங்கை தேசத்தின் ஜனங்களுக்கு உரையாற்றும்படி இலங்கையின் தேசிய தொலைக்காட்சி நிலையத்தினரால் அழைக்கப்பட்டார். சென்னை திரும்பிய பிறகு, பெங்களூருவில் பல்வேறு வேதனைகளோடு, தேவைகளோடு இருக்கும் மக்களுக்காக பிரார்த்தனை செய்யும்படி பால்தினகரன் பெங்களூரு சென்றார். தற்போது அவர் சென்னை திரும்பியுள்ளார். ஜாதி, இன, சமய வேறுபாடில்லாமல் அனைவருக்காகவும் ஊழியத்தை அவர்கள் குடும்பமாக தொடர்ந்து செய்து வருகிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.