விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கிய விவகாரம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. சஸ்பெண்ட்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி  பழனிசாமி, “சென்னை பெரம்பூர் தெற்கு பகுதி அதிமுக செயலாளர் இளங்கோவனை கடந்த 27ம் தேதி 5 பேர் கொலை செய்துள்ளனர். கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளித்ததால்  அவர் கொல்லப்பட்டுள்ளார். இத்தகைய குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்களின் பிடியில் இருந்து மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயம் விடுபட வேண்டும். கஞ்சா வியாபாரிகள் பற்றி தகவல் கூறுபவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு  வந்தார்.

மேலும் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங் விசாரணை கைதிகள் மீது  தாக்குதல் செய்த விவகாரம் குறித்து இசக்கி சுப்பையா (அதிமுக), பிரின்ஸ் (காங்கிரஸ்), அருள் (பாமக), ஷாநவாஸ் (விசிக), நாகை மாலி (இந்திய  கம்யூனிஸ்ட்), ஜவாஹிருல்லா (மமக), வேல்முருகன் (தவாக) உள்ளிட்ட எம்எல்ஏக்கள்  சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் இளங்கோவன் என்ற வியாசை இளங்கோ நேற்று முன்தினம் 5 பேர் கொண்ட கும்பலால் கத்தியால் வெட்டப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.  

அவர் மனைவி சுமலதா கொடுத்த புகாரின் அடிப்படையில், செம்பியம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், கொலையுண்ட இளங்கோ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சஞ்சய் என்பவரை பொது வெளியில் வைத்து தாக்கியதாகவும், அந்த முன்விரோதம் காரணமாக சஞ்சய் இந்த கொலைத் திட்டத்தை தீட்டியுள்ளதும் தெரிய வந்தது. காவல் துறையினர் இரவோடு இரவாக இரண்டு மணி நேரத்தில், வழக்கில் தொடர்புடைய சஞ்சய், கணேசன், கவுதம், வெங்கடேசன், அருண்குமார் ஆகிய 5 குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள். இவர்களில் ஒருவர் இளஞ்சிறார் குற்றவாளி. மேலும், கொலை செய்யப்பட்ட இளங்கோ, போதைப் பொருளுக்கு எதிராக இருந்ததாக சொல்லப்படுவது குறித்து விசாரணையில் இதுவரையில் தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்த புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்தபடியாக, அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. விவகாரத்தை பொறுத்தமட்டில், குற்றச் செயலில் ஈடுபட்டு, விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிலருடைய பற்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன், சேரன்மாதேவி சார்-ஆட்சியர்/ உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. அந்த ஏ.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு உடனடியாக மாற்றப்பட்டார்.   காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவிதமான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது. அந்த வகையில், இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன்.

மேலும், முழுமையான விசாரணை அறிக்கை வரப்பெற்றவுடன், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.  இவையெல்லாமே சம்பவம் நடைபெற்ற உடனேயே இந்த அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள்.  திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில், சாதி மோதல்கள், ரவுடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.  2019ல், கடந்த அதிமுக ஆட்சியில், 1,670 கொலைச் சம்பவங்கள் நடந்தன. திமுக ஆட்சியில், அதாவது, 2022ல் அது 1,596 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஆண்டு ஒன்றுக்கு 74 கொலைகள் இந்த ஆட்சியில்தான் குறைக்கப்பட்டுள்ளன; அப்படிச் சொல்வதை விட அது தடுக்கப்பட்டிருக்கிறது. நமது ஆட்சியைப் பொறுத்தவரை, காவல் துறை சுதந்திரமாகவும், விரைவாகவும் செயல்பட்டு, கொலையாளிகள் யாராக இருந்தாலும், கொலை செய்யப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அதில் எந்தவிதமான பாரபட்சமோ, அரசியலோ எதுவும் பார்க்காமல், உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: