ஆவடி: திருமுல்லைவாயல் பகுதியில் பெண்ணிடம் மர்ம ஆசாமிகள் செல்போனை பறித்துச் சென்றனர். ஆசாமிகளை பெண் கடித்து வைத்ததால், அவர் அணிந்திருந்த பிளாட்டினம் செயின் தப்பியது. ஆவடி, கோவில் பதாகை, கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சிக்காரா (29). இவரது கணவர் பெயர் சாயினுதீன். இவர்களுக்கு ஒரு கைக் குழந்தை உள்ளது. நேற்றுமுன் தினம் இரவு திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதிக்கு மருந்து வாங்க தனது கைக்குழந்தையுடன் சிக்காரா சென்றிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், சிக்காரா அணிந்திருந்த பிளாட்டினம் சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது சிக்காரா சங்கிலியை பறிக்க முயன்றவரின் கையை கடித்தார். எனினும் அவர் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை ஆசாமிகள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல்நிலையத்தில் சிக்காரா புகார் அளித்தார். அங்குள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகள் குறித்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.