அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’’ என்ற கட்சியின் சட்ட திட்ட விதி – 20 (அ), பிரிவு - 2ன்படியும், கழக சட்ட திட்ட விதி - 20அ, பிரிவு - 1, (ஏ), (b), (சி) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படியும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி மு.பழனிசாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக, கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது, தேர்தல் ஆணையாளர்களான, கழக துணைப் பொதுச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன், கட்சியின் தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி ஏ.ஜெயராமன், ஆகியோரால் இன்று (மார்ச்.28) அறிவிக்கப்பட்டு, அதற்கான வெற்றிப் படிவத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி மு. பழனிசாமியிடம் வழங்கினார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: