அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் ஏப்.5-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும்: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் ஏப்.5-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று பொதுச்செயலாளர் ஈபிஎஸ் முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் இடைக்கால விண்ணப்பங்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு நிராகரித்ததை அடுத்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடி வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து தனது முதல் முதல் அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதிமுறைப்படி, கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 5.4.2023 - புதன் கிழமை முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கழக உடன்பிறப்புகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ. 10/- வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: