புதுடெல்லி: தேசிய கல்வி கொள்கையின்படி பாட புத்தகங்களில் மாற்றம் செய்யப்பட்டு 2024-25 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய பாஜ அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது. இந்நிலையில் 2024-25 கல்வியாண்டு முதல் அனைத்து நிலை மாணவர்களும் புதிய, புதுப்பிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை படிப்பார்கள் என ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாட புத்தகங்களில் திருத்தம் செய்து புதிய பாடங்களை சேர்ப்பதற்கு முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்துாரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது.
புதிய தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் இந்த குழு புதிய பாட திட்டங்களை தயாரித்து வருகிறது. இதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்,‘‘ பள்ளி பாடபுத்தகங்களில் மாற்றம் செய்வது கடினமான பணி ஆகும். குறித்த நேரத்தில் இதற்கான இலக்கை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையின்படி பாடத்திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(என்சிஇஆர்டி) புத்தகங்களை தயாரித்து வருகிறது. இந்த புதிய பாடத்திட்டங்கள் டிஜிட்டல் வடிவிலும் கிடைக்கும். கொரோனா பரவலின்போது, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது. இதனால், பாடபுத்தகங்கள் டிஜிட்டல் முறையில் டவுன்லோட் செய்வதற்கான வசதி செய்யப்படும்’’ என்றனர்.