புதுடெல்லி: பான் மசாலா மற்றும் சிகரெட்கள் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது அதிகபட்ச செஸ் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று நிதி மசோதா 2023 ஐ சில திருத்தங்களுடன் ஒன்றிய அரசு மக்களவையில் நிறைவேற்றியது. இந்த திருத்தங்களின்படி பான் மசாலா, சிகரெட்டுகள் மற்றும் இதர புகையிலை பொருட்களுக்கு அதன் சில்லரை விலை விற்பனையில் அதிகபட்ச ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி விதிக்கப்பட உள்ளது. இந்த திருத்தத்தின்படி பான்மசாலாவுக்கான சில்லரை விலை ஒரு யூனிட்டுக்கு அதிகபட்சமாக 51 சதவீதம் வரை செஸ் வரி விதிக்கப்படும். அதே போல் புகையிலை பொருட்களுக்கான செஸ் வரி விதிப்பு ஆயிரத்துக்கு ரூ.4,170 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது புகையிலை பொருட்கள் மீது 290 சதவீத வரியும், பான் மசாலா பொருட்கள் மீது 135 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.