சென்னை: ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு என்பது ஜனநாயக படுகொலை என பாரத மக்கள் கழகத்தின் தலைவர் வி.பிரபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை சூரத் நீதிமன்றம் விதித்த உடனே, அவசர அவசரமாக மக்களவை செயலகம் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்துள்ளது என்பது ஜனநாயக படுகொலை. பாஜவின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், இந்திய ஜனநாயகத்திற்கு ஆதரவான குரல் இனி மேலும் தொடர்ந்து ஒலிக்கும் என ராகுல் காந்தி கூறியதை வரவேற்கிறோம். நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பாவிட்டாலும், மக்கள் மன்றத்தில் ராகுலின் குரல் தொடர்ந்து எதிரொலிக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.