கொரோனாவுக்கு பின் நுரையீரல் தொற்று, ஞாபக மறதி சுவாச பிரச்னை அதிகரிப்பு: அப்போலோ மருத்துவமனை கருத்தரங்கில் தகவல்

சென்னை: கொரோனாவுக்கு பின் ஞாபக மறதி, நுரையீரல் தொற்று, சுவாச பிரச்னை போன்றவை பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது என அப்போலோ மருத்துவமனை கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் அப்போலோ மருத்துவமனையின் சார்பில், சுவாச மண்டலம் தொடர்பாக மருத்துவ நிபுணர்களுக்கான கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் நெஞ்சக சிகிச்சை துறை மருத்துவ நிபுணர்கள் பலர் பங்கேற்று கருத்துக்களை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பேசிய அப்போலோ மருத்துவமனை குழு துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி, ‘இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, கொரோனோ தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. தற்போது பரவலின் வேகம் குறைந்து இருந்தாலும் பெரும்பாலானோருக்கு நுரையீரல் மற்றும் நெஞ்சக பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தற்போது நடைமுறையில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விவாதித்தனர்.  கருத்தரங்கின் நிறைவில் அப்போலோ மருத்துவர்கள் நரசிம்மன், சுரேஷ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆஸ்துமா, நீண்ட நாள் கோவிட் பாதிப்பு, முதியவர்களுக்கான தடுப்பூசி முறைகள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கபட்டது. கொரோனா தொற்றுக்கு பிறகு பெரும்பாலானோருக்கு ஞாபக மறதி, நுரையீரல் தொற்று, சுவாச பிரச்னை, உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் கண்டறியப்பட்டு வருகிறது. மேலும், வழக்கத்தை காட்டிலும் நுரையீரல் பாதிப்பால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவிட், இன்புளுயன்ஸா பாதிப்பிற்கு பிறகு மாரடைப்பு மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளும் பரவலாக கண்டறியப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: