புழல்: புழல் புனித அந்தோணியார் நகரில், சுமார் 300க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் புதிதாக தனியார் நிறுவனத்தின் மூலம் போதை மறுவாழ்வு மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இதனை அறிந்த, அப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சி 24வது வார்டு கவுன்சிலர் சேட்டுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் அங்கு வந்து போதை மறுவாழ்வு மையம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்படாது என உறுதி அளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.