சென்னை: சென்னை, காவேரி மருத்துவமனையில் “மரபுவழி இதயநோய்கள் மேலாண்மையில் சமீபத்திய மேம்பாடுகள்” என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. ‘இளவயதில் திடீரென ஏற்படும் மாரடைப்பினால் உண்டாகும் இறப்பு நிகழ்வை தடுப்பது’ என்பது, இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களுள் ஒன்று. காவேரி மருத்துவமனையின் இதய உயர் சிகிச்சை மருத்துவர் டாக்டர் அனந்தராமன், காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், மரபுவழி இதயநோய்கள் மற்றும் விளையாட்டுகள் தொடர்பான இதயவியல் துறையின் பேராசிரியர் டாக்டர் சஞ்சய் சர்மா, இதய செயலிழப்பு மற்றும் இரத்த ஊட்டக்குறை துறை பேராசிரியர் ஆர்தர் வைல்டு, போன்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து இதயவியல் மற்றும் இதய மின் உடலியங்கியல் (எலெக்ட்ரோபிசியோலஜி) துறையைச் சேர்ந்த பல நிபுணர்கள் இந்த ஒருநாள் கருத்தரங்கில் பங்கேற்றனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான இதய அறுவைசிகிச்சைகள், இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை துறையில் முன்னோடியாக திகழும் டாக்டர். செரியன் மற்றும் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக இதயவியல் துறையில் மருத்துவ மாணவர்களுக்கு கற்பித்து, இதயவியல் மருத்துவராகவும் செயலாற்றி வரும் டாக்டர். சிவகடாக்ஷம் ஆகிய இருவரும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.