லட்சக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை:சென்னை வர்த்தக மையத்தில் தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு உச்சி மாநாடு நடைபெற்றது. இதன் நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் கண்காட்சியை பார்வையிட்டு, ‘நான் முதல்வன்-2023’ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, “Innovations and intelligence for” என்ற புத்தகத்தை வெளியிட்டார். மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை வடிவமைக்கும் கடமை நம்முடைய இளைய சமூகத்திடம், அதாவது நம் அனைவரிடமும் உள்ளது. எதிர்காலத்தை பார்க்கையில், இந்தியாவுக்கான நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல நமக்குச் சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு இளைஞர்களின் உழைப்புச் சக்தியால் ஆசீர்வதிக்கப்பட்டது. அடுத்து வரும் பத்தாண்டுகளில், உலகின் உழைக்கும் வயது கொண்ட மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதமாக நாம் இருப்போம். ஆனால், இதில் நம் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது.

அடுத்து வரும் 25 ஆண்டுகளில், இந்திய இளைஞர்களுக்கென 22 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. புதிய திறன்களும் செயலூக்கமும் தேவைப்படும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளையும் இது உள்ளடக்கியது. இந்த சவாலை நாம் வெற்றிகரமாக எதிர் கொண்டோம் என்றால், ஒட்டுமொத்த மக்களையும் வறுமை கோட்டுக்கு மேலே கொண்டு வருவதில் நம்மால் முக்கியப் பங்காற்ற முடியும். லட்சக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.  தமிழ்நாட்டுக்கு எண்ணற்ற சிறப்புகள் உள்ளன. நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகவும் நாம் இருக்கிறோம். உயர்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. விளைவாக, நம்மிடம் திறமையான இளைஞர்கள் உள்ளனர். நம்முடைய பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு கிட்டத்தட்ட 40 சதவீதமாக உள்ளது. இது உலக சராசரிக்கு அருகே உள்ளது. இந்திய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகம். ஆராய்ச்சியாளர்களுடனும் தொழில் துறையினருடனும் இணைந்து எதிர்காலத்துக்குப் பாதை அமைத்து வருகிறோம். தமிழ்நாட்டின் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியின் முக்கியத் தளமாக யுமாஜின் விளங்கும். இந்த மாநாடு உலகெங்கிலுமுள்ள புதுயுக தொழில் முனைவோர்களையும், முதலீட்டாளர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும், கொள்கை வகுப்பாளர்களையும், கல்வியாளர்களையும் ஒன்றிணைத்திருக்கும் என்று நம்புகிறேன். இது தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் தொழில் நுட்ப சூழலையும் புத்தாக்கச் சூழலையும் வெளிப்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: