சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை இருந்தால் மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதி என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து,சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருகிற ஏப்ரல் 19ம் தேதி முதல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் செலுத்துவதற்கு பதிலாக மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மிகவும் திறமையான, வசதியான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், அத்துடன் பணப் புழக்கத்தைக் குறைக்க வேண்டிய தேவைக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பயணிகள் வாகன நிறுத்துமிடங்களில் இருந்து வேகமாக நுழைவது மற்றும் வெளியேறுவது, பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளின் வசதி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்கும்.