தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடிய பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து போலீசார் காப்பாற்றினர்'தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடிய பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து போலீசார் காப்பாற்றினர்: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

பல்லாவரம்: பழைய பல்லாவரம், சுபம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (70). இவரது மனைவி தமிழ்செல்வி (53). கடந்த 15ம் தேதி குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த தமிழ்செல்வி படுக்கை அறையை பூட்டிக் கொண்டு, புடவையால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.  இதுபற்றி அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். பல்லாவரம் காவல் உதவி ஆய்வாளர் கோபால், தலைமை காவலர்கள் ரமேஷ், ஷேக் முகமது, மற்றொரு ரமேஷ் என 4 பேர் 7 நிமிடத்தில் அங்கு விரைந்து வந்து கதவை உடைத்து, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த தமிழ்செல்வியை மீட்டனர். ஆனால், மூச்சு பேச்சு இல்லாமல் அவர் மயங்கினார்.

 அப்போது சமயோசிதமாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் கோபால், தமிழ்செல்வியின் உயிரை காப்பாற்றும் வகையில் உடனடியாக சிபிஆர் என்று அழைக்கப்படும் உயிர் காக்கும் (Cardiopulmonary resuscitation) என்ற சிகிச்சை அளித்தார். அவரது நெஞ்சில் கை வைத்து தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருந்தார். திடீரென அவர் பலத்த மூச்சு விட்டபடி எழுந்தார். இதனால் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் விட்டனர். தொடர்ந்து போலீசார் தமிழ்செல்வியை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது அவர் நலமுடன் உள்ளார்.

பொதுவாக, ராணுவத்தில் மட்டுமே இதுபோன்ற உயிர்காக்கும் சிகிச்சை (சிபிஆர்) அளிக்கப்படுவது வழக்கம். தற்போது பல்லாவரம் போலீசாரும் இதே பாணியில் பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: