கீழ்பென்னாத்தூர் அருகே முன்விரோதத்தில் மண்வெட்டியால் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை: தடுக்க முயன்ற தாய், மனைவிக்கும் வெட்டு; அண்ணன், தம்பிக்கு போலீஸ் வலை

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் அருகே முன்விரோதத்தில் மண்வெட்டியால் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொல்லப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் வேலுச்சாமி(51), மண்பாண்ட தொழிலாளி. இவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் சாந்தி(45)க்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் வேலுச்சாமி புகார் மனு கொடுத்துள்ளார். இந்நிலையில், வேலுச்சாமி வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் நேற்று மாலை ஈடுபட்டார்.

அப்போது, 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்று திரும்பி வந்த சாந்தி, ‘என் வீட்டை கண்காணிக்க கேமரா பொருத்துகிறாயா’ எனக்கேட்டு வேலுச்சாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த வேலுச்சாமி மண்வெட்டியால் சாந்தியை தாக்கினார். இதைப்பார்த்து ஆத்திரமடைந்த சாந்தியின் மகன்கள் வேடி(23), சந்தோஷ்(22) ஆகியோர் ஓடி வந்து வேலுச்சாமியிடம் இருந்த மண்வெட்டியை பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற அவரது தாய் நாவம்மாள்(70), மனைவி சுசிலா(45) ஆகியோரையும் வெட்டினர். இதில், வேலுச்சாமி ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயமடைந்த நாவம்மாள், சுசீலா. சாந்தி ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து அண்ணன், தம்பியை தேடி வருகின்றனர்.

Related Stories: