வளி மண்டல காற்று சுழற்சி நீடிப்பு தமிழ்நாடு, புதுச்சேரியில் லேசான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக ஆங்காங்கே சில மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் நேற்று அதிகபட்சமாக 39.4 டிகிரி செல்சியஸ் வெயில் நீடித்தது. குறைந்தபட்சமாக நாமக்கல்லில் 21.0 டிகிரி செல்சியஸ் நீடித்தது. சென்னை, கடலூர், வேலூர், மாவட்டங்கள் புதுச்சேரியில் இயல்பைவிட 2.1 டிகிரி செல்சியஸ் முதல் 4.0 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட வெப்பம் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் இணைந்துள்ளன. அதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30-40 கிமீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தொடர்ந்து 28ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் ஓரளவு  வானம் மேகமூட்டதுடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: