சென்னை: பெசண்ட் நகர் கடற்கரையில் சர்வதேச வன நாள் விழாவை முன்னிட்டு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் சர்வதேச வனநாள் அடையாளமாக ஆமை குஞ்சுகளை கடலில் விட்டார்.
சென்னை, பெசண்ட் நகர், எலியாட்ஸ் கடற்கரையில் இன்று வனத்துறை சார்பாக நடைபெற்ற சர்வதேச வன நாள் விழாவில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து, கடற்கரை வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியில் பங்கேற்று, வனத்துறை மூலம் வளர்க்கப்பட்ட ஆமை குஞ்சுகளை கடலில் விட்டார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் நாள் சர்வதேச வன நாளக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி இன்று வனத்துறை சார்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாணவ, மாணவியர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் பங்கேற்கும் தூய்மைப் பணியும், பேரணியும் பெசண்ட் நகர், எலியாட்ஸ் கடற்கரையில் நடத்தப்படுகின்றன.