சர்வதேச வனநாள் அடையாளமாக ஆமை குஞ்சுகளை கடலில் விட்டார் அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்.!

சென்னை: பெசண்ட் நகர் கடற்கரையில் சர்வதேச வன நாள் விழாவை முன்னிட்டு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் சர்வதேச வனநாள் அடையாளமாக ஆமை குஞ்சுகளை கடலில் விட்டார்.

சென்னை, பெசண்ட் நகர், எலியாட்ஸ் கடற்கரையில் இன்று வனத்துறை சார்பாக நடைபெற்ற சர்வதேச வன நாள் விழாவில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து, கடற்கரை வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியில் பங்கேற்று, வனத்துறை மூலம் வளர்க்கப்பட்ட ஆமை குஞ்சுகளை கடலில் விட்டார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் நாள் சர்வதேச வன நாளக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி இன்று வனத்துறை சார்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாணவ, மாணவியர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் பங்கேற்கும் தூய்மைப் பணியும், பேரணியும் பெசண்ட் நகர், எலியாட்ஸ் கடற்கரையில் நடத்தப்படுகின்றன.

வனம் மற்றும் கடலில் வாழும் விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக வனத்துறையால் வளர்க்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இதுபோல் பொதுமக்களும் சுற்றுச்சூழலை பாதுகாத்திட வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாத்திட சர்வதேச வனநாள் விழாவில் வனத்துறையுடன் இணைந்து பங்கேற்க வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா ஸாஹு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்/தலைமை செயல் அலுவலர் (கேம்பா) திரு.சுதாநாஷீ குப்தா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (தலைமை வன உயிரின காப்பாளர்) திரு.சீனிவாஸ் ரா ரெட்டி, சென்னை மண்டல வனப் பாதுகாவலர் கே.கீதாஞ்சலி, சென்னை மாவட்ட வன அலுவலர் எஸ்.சண்முகம் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: