கோலாலம்பூர் விமானத்தில் நடுவானில் மாரடைப்பு மலேசிய பயணி மரணம்

மீனம்பாக்கம்: கோலாலம்பூர் செல்லும் விமானம் நடுவானில் பறந்தபோது மலேசிய பயணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. சென்னையில் அவசரமாக தரையிறங்கியும் பயணி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சவுதி அரேபியா நாட்டிலுள்ள ஜெட்டாவில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு, ஏர் ஏசியா பயணிகள் விமானம் 164 பயணிகளுடன் நேற்று முன்தினம் சென்று கொண்டு இருந்தது. அந்த விமானம் இரவு 11.30 மணி அளவில் சென்னை வான் வெளியை கடந்து சென்று கொண்டிருந்தது. விமானத்தில் மலேசியாவை சேர்ந்த வஹாப் அகமது (39), தனது நண்பர் ஒருவருடன் பயணித்துக் கொண்டு இருந்தார்.

இந்நிலையில் வஹாப் அகமது, திடீரென கடுமையான நெஞ்சுவலியால், விமானத்துக்குள் துடித்தார். இதையடுத்து அவருடைய நண்பர், விமான பணிப்பெண்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து, முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, விமானிக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த விமானம், அப்போது சென்னை அருகே, வானில் பறந்து கொண்டு இருப்பதை அறிந்த விமானி, உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, அந்த விமானம் மருத்துவ உதவிக்காக, அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.

உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து, உடனடியாக சென்னை விமான நிலையத்தில், அந்த  விமானம் தரையிறங்க அனுமதி அளிப்பதோடு, மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து, ஏர் ஏசியா விமானம், நள்ளிரவு 11.50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. உடனடியாக சென்னை விமானநிலைய மருத்துவக் குழுவினர் விமானத்தில் ஏறி பயணியை பரிசோதித்தனர். அப்போது பயணிக்கு  கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்க வேண்டியதை அறிந்தனர். விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், மலேசிய பயணி வஹாப் அகமது மற்றும் அவருடைய நண்பரர் என இருவருக்கும் அவசரகால மருத்துவ விசாக்கள் வழங்கினர்.

பின்னர், இருவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனர். உடனடியாக சென்னை விமான நிலைய ஆம்புலன்ஸ் மூலம்  குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வஹாப் அகமதுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை 2 மணி அளவில், மலேசிய பயணி வஹாப் அகமது  மாரடைப்பால் உயிரிழந்தார். இதுபற்றி சென்னை விமானநிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான நிலைய போலீசார், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு மலேசிய பயணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு, சரக்கு விமானம் மூலம், சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கொண்டு செல்லவும், சென்னையில் உள்ள மலேசிய நாட்டு தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சென்னையில் அவசரமாக தரையிறங்கிய ஏர் ஏசியா விமானம், மீதி 162 பயணிகளுடன், நள்ளிரவு 12.30 மணிக்கு, சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம், பயணி ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்காக, சென்னையில் அவசரமாக தரையிறங்கியும், பயணியின் உயிரை காப்பாற்ற முடியாத சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: