பட்ஜெட் அறிவிப்புகளை பொதுமக்கள் பார்க்கும் வகையில் 5.23 கோடி பேருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது: செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு அதிகாரிகள் பாராட்டு

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளை, பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் 5.23 கோடி பேருக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக செய்தி மக்கள் தொடர்பு துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் கடந்த 20ம் தேதியும், வேளாண்மை மற்றும் உழவர் நல துறைக்கான நிதிநிலை அறிக்கை 21ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்து அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்த்திடும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

சமூக ஊடகங்க ளான வாட்ஸ்அப் குழுக்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதேபோல, அமைச்சர்கள், மிக முக்கிய பிரமுகர்களின் டிவிட்டர், முகநூல், டெலிகிராம், இன்ஸ்ட்டாகிராம், யூ-டியூப் போன்ற சமூக ஊடக பக்கங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றின் மூலம் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் எளிய வடிவிலான சமூக ஊடக அட்டைகளாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இத்தகைய சமூக ஊடக அட்டைகள் அரசு துறைகளின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்கள், வலைத்தளங்களில் பகிர்ந்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மாவட்டங்கள் அளவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மூலமாக மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள குழுக்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் பகிரப்பட்டது. புதிய திட்டம் அறிவிப்புகள் தொடர்பாக முக்கிய பிரமுகர்கள், சமூக ஆளுமை பெற்ற நபர்கள், பொதுமக்கள், பயனாளிகளிடம் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஒருங்கிணைப்போடு புதிய திட்டம் அறிவிப்புகள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ் மூலமும் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 20ம் தேதி மட்டும் 5 கோடியே 23 லட்சம் பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ் சென்றடைந்துள்ளன என தமிழக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: