தெற்காசியாவிலேயே தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க பாடுபடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இந்திய அளவில் மட்டுமல்லாமல், தெற்காசியாவிலேயே, தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட, நாம் அனைவரும் இணைந்து, அந்த இலட்சிய இலக்கினை அடைவதற்கு பாடுபட வேண்டும் என்று எம். மித்ரா-பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா விருதுநகர் மாவட்டத்தில் அமைப்பதற்கான தொடக்க விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற இந்தியாவில் முதலாவதாக பி.எம். மித்ரா-பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா விருதுநகர் மாவட்டத்தில் அமைப்பதற்கான தொடக்க விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் அமையவுள்ள, ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காவின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்த இந்திய நாட்டின் பிரதமர் மோடிக்கும், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவர் பேசுகிற போது சொன்னார், மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுக்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டு இருக்கும் என்று. அவருக்கு மட்டுமல்ல, முதலமைச்சர் என்கின்ற முறையில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

தொழில் துறையைப் பொறுத்தவரையில், இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலான கவனத்தைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது. அந்தத் தொழில் துறையில் ஜவுளி வர்த்தகமும் முக்கியமானதாகும். நம் நாட்டின் கைத்தறித் துணி வர்த்தகத்தில், தமிழ்நாடு மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது. பெருமளவு பருத்தி நூல் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், தமிழ்நாடு ‘இந்திய நாட்டின் நூல் களஞ்சியம்’ என அழைக்கப்படுவதோடு, நூற்பு, கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, ஆயத்த ஆடை மற்றும் ஆடைத் தயாரிப்பில் முதன்மையான மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. 1971ம் ஆண்டு திமுக ஆட்சியில் தலைவர் கலைஞரால் தொடங்கப்பட்ட சிப்காட் நிறுவனம், தற்போது அரை நூற்றாண்டைக் கடந்து, தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பெரும்பங்காற்றி வருகிறது.

தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, குறிப்பாக, தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து எங்களுடைய தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. இதற்கெல்லாம் மகுடம் வைப்பதைப் போல, விருதுநகர் மாவட்டத்தில் சிப்காட் நிறுவனத்தின் மூலம் அமையப்பெறவுள்ள, பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா பூங்கா) திகழப் போகிறது. பிரதமரையும் என்னையும் அழைக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசுகிற போது ஒரு வேண்டுகோளை எடுத்து வைத்தார். நிச்சயமாக, உறுதியாக அழைப்போம், வருவீர்கள், அந்த நிகழ்ச்சியை சிறப்பிப்பீர்கள்.

ஒன்றிய அரசு இந்தப் பூங்காவிற்கு அனுமதி அளித்துள்ள ரூ.500 கோடி மானியத்துடன், மொத்தம் ரூ.2 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட இருக்கின்றன. இந்தப் பூங்கா முழு அளவில் செயல்படும் போது, சுமார் 2 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவதோடு, தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாடு அரசின் சார்பில் சேலத்தில் மாபெரும் ஜவுளி பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்பதை அரசின் நிதிநிலை அறிக்கை மூலமாக இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளோம்.

10 சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளோம். தமிழ்நாட்டில் கிடைக்கப் பெறும் அனைத்துத் தொழில் வாய்ப்புகளையும், தொழில் நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும் பயன்படுத்திக் கொண்டு, நாம் நிர்ணயித்துள்ள இலக்கான, 2030-2031 ஆண்டுக்குள், தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியினை எய்திட அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில்நுட்ப ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.

சேலத்தில் அமையவுள்ள ஜவுளிப் பூங்காவிற்கு ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த செயலாக்க மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ஒன்றிய அரசின் நிதியை வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். இத்திட்டத்திற்காக மாநில அரசின் சார்பில் ஏற்கனவே 119 ஏக்கர் நிலத்தினை ஒதுக்கீடு செய்துள்ளதோடு, திட்ட செலவிலும் 25 விழுக்காட்டை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே பிரதமர், ஜவுளித் துறை அமைச்சர் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும். இந்திய அளவில் மட்டுமல்லாமல், தெற்காசியாவிலேயே, தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட, நாம் அனைவரும் இணைந்து, அந்த இலட்சிய இலக்கினை அடைவதற்கு பாடுபட வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஐவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ஒன்றிய இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஆர். காந்தி, மா.சுப்பிரமணியம், பெரியகருப்பன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு, ஒன்றிய அரசின் செயலாளர் ரச்சனா ஷா உள்ளிட்ட தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் முதலீட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பருத்தி நூல் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், தமிழ்நாடு ‘இந்திய நாட்டின் நூல் களஞ்சியம்’ என அழைக்கப்படுகிறது.

Related Stories: