சிறுமிக்கு பாலியல் தொல்லை பக்கத்து வீட்டுக்காரருக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை: அண்ணாநகர் அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்த 55 வயதான குமார், அதேபகுதியில் உள்ள 6 வயது சிறுமியிடம் தன் வீட்டு மாடியில் பூனைகள் இருப்பதாக கூறி அழைத்து சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலீசார் வழக்கு பதிந்து, குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை சிறுமிக்கு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் தமிழ்நாடு அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: