லக்னோ: உயிர் பயத்தால் தலைமறைவாக இருந்த ரவுடி, காவல் நிலையத்தில் சரணடைந்தான். கழுத்தில் பதாகையுடன் சரணடைந்ததால் அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருவதும், கடுங் குற்றவாளிகளை என்கவுன்டரில் சுட்டுத் தள்ளுவதும், அவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து தள்ளுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார். இவரது இந்த நடவடிக்கையால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பீதியில் உறைந்துள்ளனர். அதேநேரம் முதல்வரின் இதுபோன்ற நடவடிக்கைக்கு கண்டனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஷாசாத் என்பவன், மண்டி காவல் நிலையத்திற்கு வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மேந்திர சிங் முன்பு கைகூப்பி நின்று சரணடைந்தான். அவன் தனது கழுத்தில் ஒரு பதாகையை மாட்டியிருந்தான்.